தமிழ்நாடு

சீர்காழி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

துணை ஆட்சியர் நாராயணன் நடவடிக்கையால் சீர்காழி அருகே நடக்கவிருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

சீர்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுக்கு பெற்றோர்கள் ஏற்பாட்டின்படி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணமகன் – மணமகள் ஆகிய இருதரப்பினரும் அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் திருமணம் நடைபெற உள்ள பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்ற தகவலை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இதனை சீர்காழி துணை ஆட்சியர் நாராயணனிடம் தெரிவித்தனர். இதனை அடுத்து துணை ஆட்சியர் நாராயணன், சீர்காழி தாசில்தார் சண்முகத்திடம் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

உத்தரவின் பேரில் சீர்காழி தாசில்தார் சண்முகம் மற்றும் புதுப்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் சந்திரா மற்றும் காவலர்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஆர்.ஐ., விஏஓ ஆகியோர் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று மணப்பெண் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சான்றிதழ்கள் சரிபார்த்த போது பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் ஆறு மாத காலம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தை திருமண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். மேலும் இரு தரப்பு பெற்றோர்களும் இதுகுறித்து விளக்கம் அளித்து எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி தாசில்தார் சண்முகம் நடவடிக்கை எடுத்தார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமண அழைப்பிதழ்கள் பெற்ற உறவினர்கள், நண்பர்கள் என திருமண மண்டபத்திற்கு வருகை தந்து திருமணம் நடைபெறவில்லை என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சிவராஜ், மாவட்ட நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button