தமிழ்நாடு

சென்னை மருத்துவக் கல்லூரியில் இனி Ph.D. பட்டம் பெறலாம்..!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார ஆராய்ச்சித்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் நிதியுதவியுடன், சென்னை மருத்துவக் கல்லூரியில் முதன்முறையாக Ph.D பட்டத்திற்கான பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

Ph.D பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளின் வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். சென்னை மருத்துவக் கல்லூரி தற்போது முனைவர் பட்டம் வழங்கும் கல்லூரியாகவும் மாறி தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் முன்னோடியாக திகழ்கிறது.

ஐசிஎம்ஆர் அளிக்கும் தகவலின் படி நம் நாட்டில் உள்ள 21 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இருந்து 67 இளம் மருத்துவர்கள் இந்த முனைவர் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் “மருத்துவக் கல்வி வழங்குவதில் 189 வருட பாரம்பரியம் கொண்ட சென்னை மருத்துவக் கல்லூரி, தற்போது Ph.D படிப்பையும் முதலில் கொண்டு வந்து தனித்துவத்தை நிறுவியுள்ளது” என பெருமிதம் கொள்கிறார், சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தேரணி ராஜன்.

முனைவர் பட்டத்திற்காக சென்னை மருத்துவக் கல்லூரியால்  29 தலைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 6 தலைப்புகள் இந்திய மருத்துவக் ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பப்பட்டன.

அதில் 4 தலைப்புகளின் ஆராய்ச்சி செய்வதற்கு தலா 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடி ரூபாயை ஐசிஎம்ஆர் ஒதுக்கியுள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரியில் 3 மருத்துவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்ற நிலை இருந்தாலும் சென்னை மருத்துவக் கல்லூரியால் பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகள் சிறப்பாக இருந்ததன் காரணமாக சிறப்பு அனுமதி கொடுத்து 4 பேருக்கான ஆராய்ச்சி வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி சென்னை மருத்துவக் கல்லூரியின் 4 மருத்துவர்கள் பின் வரும் தலைப்புகளின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

1. மரு. ஜி.கவிதா –  ரத்த சிவப்பணுக்களில் மரபணு  வகைப்படுத்துதல்

2. மரு.நிஷா -பாம்புகளின்  விஷத்தில் உள்ள தனிக்  கூறுகளை கண்டறிதல்  மற்றும் பாம்புக் கடியால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள்,  அங்குள்ள சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கு பாம்பு கடிக்கான சிகிச்சை, கவனிப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல்

3. மரு.ராஜ பிரியா – மரபணு பிரச்சனைகளால்  காரணம் கண்டறியப்படாத குழந்தையின்மை பிரச்சனை, கருக்கலைவு

4.மரு.செந்தில் குமார் – எலும்பு முறிவு சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் இந்த முனைவர் பட்டத்திற்கான தொடக்கம், வரும் நாட்களில் சர்வதேச அளவிலான ஏராளமான மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button