தமிழ்நாடு

சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல… மரியாதை..! : முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோயில்களில் தினசரி அளிக்கப்பட்டு வரும் அன்னதானத்தில் அவமதிக்கப்படுவதாக நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து மாமல்லை தலசயனப் பெருமாள் கோயில் அன்னதானத்தில் நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினியை அருகே அமர்த்தி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உணவருந்தியதற்குப் பாராட்டுகள் குவிந்தன.

இதனிடையே, குறவர் மற்றும் இருளர் பழங்குடியின மக்களுக்கான 4.5 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விழாவில் முதல்வருக்கு ஊசிமணி மாலை அணிவித்து அஸ்வினி மரியாதை செலுத்தினார் . பின்பு அங்கிருந்த மக்களிடையே செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அஸ்வினி வீட்டுக்கும் சென்றார். தனது வீட்டிற்கு வந்ததற்கு ரொம்ப நன்றி என்று முதல்வரிடம் தெரிவித்தார் அஸ்வினி. அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அளித்த மனுக்களையும் முதல்வர் பெற்றுக் கொண்டார்.

இந்த விழா தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
“சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூக நீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி! சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு.

அதனைத்தான், “நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது” என்று முத்தமிழறிஞர் கலைஞர் குறிப்பிட்டார். திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால், காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே!

ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூக நீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது. பூஞ்சேரி கிராமத்து இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாழிடச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, நலவாரிய அடையாளச் சான்றிதழ், பயிற்சி சான்றிதழ், வங்கிக் கடன்கள் ஆகியவற்றை வழங்கினேன்.

இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது. இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உத்தரவிட்டுள்ளேன். இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது!

‘பெரியார் – அண்ணா – கலைஞர்’ ஆகியோரை நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும்”.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button