தமிழ்நாடு

லே அவுட்-கட்டிட அனுமதி… புதிய நடைமுறை அமல்

தமிழகத்தில் புதிய லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு, உள்ளாட்சி, மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குனரகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஆகியவற்றால் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகர ஊரமைப்புத்துறைக்குமான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இப்போது மாநகராட்சிகளிலும், நகர ஊரமைப்புத்துறையிலும் விண்ணப்பிக்க வேண்டிய லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.ஆனால் கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட மற்ற உள்ளாட்சிகளில், வெவ்வேறு முறைகளில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பரப்பின் அடிப்படையில் நகர ஊரமைப்புத்துறைக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

வெவ்வேறு அதிகார அமைப்புகளில் திட்ட அனுமதியை பெறுவதற்கு ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியது உள்ளது. இதை எளிமைப்படுத்தவும், விரைவுபடுத்தவும், திட்ட அனுமதிக்கு ஒற்றை சாளர முறையை கொண்டு வர வேண்டுமென்று, கிரெடாய் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நீண்ட காலமாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதன் அடிப்படையில் 2022 மே மாதத்தில் இருந்து, நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒற்றைச்சாளர முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.அனைத்து உள்ளாட்சிகளிலும் இதை நடைமுறைப்படுத்துவதோடு, உள்ளாட்சி மற்றும் நகர ஊரமைப்புத்துறைக்கும் ஒரே முகப்பில் விண்ணப்பிக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான புதிய மென்பொருள் (SINGLE WINDOW PORTAL) வடிவமைக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் கிராம பஞ்சாயத்துகள் உட்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், எவ்வளவு பெரிய லே-அவுட், கட்டிடமாக இருந்தாலும் ஒரே ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்படும்.

வரும் அக்டோபர் 2-ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.லே-அவுட் அமைக்கவும், கட்டடம் கட்டவும் விரும்புவோர், onlineppa.tn.gov.in என்ற இணைய முகப்பில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதில் லாக் இன் பாஸ்வேர்டு கொடுத்து விண்ணப்பித்தால், பரிசீலிக்கப்பட்டு உரியதாக இருந்தால் அடுத்த கட்டத்துக்கு ஏற்கப்படும். அல்லது நிராகரிக்கப்படும்.

அதன்பின் ஆவணங்களை பதிவேற்றம் செய்து, லே-அவுட் விண்ணப்பத்துக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1.50 பைசா வீதமும், கட்டடத்துக்கு சதுர மீட்டருக்கு இரண்டு ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். லே-அவுட் அல்லது கட்டிடத்தில் பரப்பை பொறுத்து, அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு அல்லது நகர ஊரமைப்புத்துறைக்கு செல்லும்.உரிய அதிகார அமைப்பின் அலுவலர்கள், கள ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் திட்ட அனுமதி வழங்குவர்.

புதிய இணைய முகப்பை எப்படி கையாள்வது என்பது குறித்து தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், பதிவு பெற்ற என்ஜினீயர்கள் ஆகியோருக்கு, மென்பொருளைத் தயாரித்துள்ள, இன்டர்லேஸ் நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி, மதுரைக்குப் பின் கோவையில் கற்பகம் பல்கலைக்கழகத்தில் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சிகளின் பணியாளர்கள், பதிவு பெற்ற என்ஜினீயர்கள் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button