போலீஸ் செய்திகள்

இரவு நேர விசாரணை கூடாது : டிஜிபி சைலேந்திர பாபு

கொலை- கொள்ளை உள்பட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள். சில குற்றவாளிகள் உண்மையை உடனே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே போலீசார் விடியவிடிய விசாரணை நடத்தி உண்மையை பெறுவார்கள்.

இந்தநிலையில் சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையின்போது கஞ்சா மற்றும் கத்தியுடன் கைதான விக்னேஷ் போலீஸ் காவலில் விசாரணையில் இருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட தங்கமணி என்ற விசாரணை கைதியும் உயிரிழந்தார்.

இந்த 2 கைதிகள் சாவுக்கு போலீசார்தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது நடந்து வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரிலும் கைதிகள் உயிரிழந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கேள்வி எழுப்பியது. இதைத்தொடர்ந்து 2 கைதிகளையும் கைது செய்து விசாரித்த போலீசார் மீது பணியிடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அடுத்தடுத்து 2 விசாரனை கைதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில் மீண்டும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

அவர், போலீஸ் காவலில் கைதிகளிடம் எவ்வாறு விசாரணை நடத்த வேண்டும் என்பது தொடர்பாக போலீசாருக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுரைகள் வழங்கி இருக்கிறார்.

இந்தநிலையில் விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் போலீஸ் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தக்கூடாது. கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button