தலைமைகாவலர் பாரதிதாசன் பணி மாற்றம்…மீண்டும் திருச்சிற்றம்பல காவல் நிலையத்திற்கு பணியமர்த்த மக்கள் கோரிக்கை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சரகத்திற்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் தலைமைகாவலராக பணியாற்றியவர் பாரதிதாசன். இவர் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு வந்த பிறகு தான் செருவா விடுதி மற்றும் அம்மையாண்டியில் வெகு நாட்களாக கொடிகட்டி பறந்து கொண்டிருந்த சாராயத்தை கண்டுபிடித்து ஆய்வாளர் உடன் சென்று அதனை ஒழித்துக் கட்டினார்.
மேலும் ஒட்டங்காடு திருச்சிற்றம்பலம் துறவிக்காடு அம்மையாண்டி ஆவணம் போன்ற பகுதிகளில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற சமூக விரோதிகளை உயர் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்று அதனை அடியோடு ஒழித்து கட்டினார். மாட்டு வண்டியில் மணல் கடத்திய வெகு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். அதனால் மணல் கொள்ளையர்களுக்கு இவர் பேரை கேட்டாலே பயம் தொற்றிக் கொள்ளும் என்கிறார்கள். அதிகாலை மதுபாட்டில் விற்பனை செய்த நபர்களை பொறிவைத்து பிடித்தும், சீட்டாட்டம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை துரிதமாக கைது செய்து நடவடிக்கை எடுத்தார். அதனால் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் வாலை சுருட்டி கொண்டிருந்தனர். இதனால் திருச்சிற்றம்பலம் பகுதி சமூகவிரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதாகவும் கூறப்படுகிறது.
காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களிடம், மிகவும் கண்ணியத்துடனும் அன்புடனும் நடந்து கொண்டு புகார்களை உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று சுற்றுவட்டார கிராம மக்களால் பாராட்டுதலுக்குரிய காவலராக இருந்தார் என்று கூறப்படுகிறது.
இதனால் திருச்சிற்றம்பலம் பகுதியில் மக்களின் பெரும் செல்வாக்கையும் நம்பிக்கையும் பெற்றார். சமூக விரோத செயல்கள் செய்யும் சமூக விரோதிகளுக்கு இவர் இங்கே தொடர்ந்து பணி செய்தால் சம்பாதிக்க முடியாது எந்த ஒரு ஆதாயமும் பார்க்க முடியாது என்று உயர் அதிகாரிகளுக்கு, இவரைப் பற்றி அவதூறான குற்றச்சாட்டுகளை அனுப்பி இவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக திருச்சிற்றம்பலம் சுற்றுவட்டார மக்களால் பரவலாக பேசப்படுகிறது.
மீண்டும் இவரை திருச்சிற்றம்பல காவல் நிலையத்திற்கு பணியமர்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பல கிராம மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர். இதை காவல்துறை உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்வார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்