தமிழ்நாடு

உயிரைக் காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்.. நேரில் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை கடந்த சில தினங்களாக கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், டிபி சத்திரம் பகுதியில் சூறைக்காற்று அடித்ததில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் சிலர் சிக்கிக்கொண்டனர். பின்னர் அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.

எனினும், உதயா என்ற ஒரு இளைஞர் மட்டும் மூச்சு இல்லாமல் கிடந்தார். ஆகையால் அவர் இறந்துவிட்டார் என அங்கிருந்தவர்கள் கருதினர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த அண்ணா நகர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அந்த இளைஞரை தூக்கி தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த இளைஞருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டது. இதையடுத்து, உரிய நேரத்தில் செயல்பட்டு உயிரை காப்பாற்றிய ராஜேஸ்வரியை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்தினார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இது மக்களின் நலன் காக்கும் அரசு என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்து, அரசு நிர்வாகத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நிலையில், அதற்கு மகுடம் சூட்டுவது போல, பருவமழைக் காலத்துப் பேரிடர் நேரத்தில், மனித உயிர் காத்த தங்களின் மகத்தான பணிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பெருமழையில் சிக்கித் தவித்து, முறிந்து விழுந்த மரத்தின் கீழே சுயநினைவின்றிக் கிடந்த உதயா என்பவரின் உயிர் காக்கும் முயற்சியில் துணிவுடன் ஈடுபட்டு, கோல்டன் ஹவர் எனப்படும் அந்தப் பொன்னான நேரத்தைச் சரியாக உணர்ந்து, அவரைத் தோளில் சுமந்து, ஓடிச் சென்று, ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரை உயிர் பிழைக்க வைத்த தங்களின் அர்ப்பணிப்பு மிக்க கடமையுணர்வும், சீருடைப் பணியாளர்களுக்குரிய ஈர இதயத்தின் வெளிப்பாடும் போற்றுதலுக்குரியவை.

தடகளப் போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக சாதனைகள் பல புரிந்ததுடன், 1992 கும்பகோணம் மகாமகத்தின் போது ஏற்படுத்தப்பட்ட நெரிசலில் உயிருக்குப் போராடியவர்களை மீட்பதில் தாங்கள் ஆற்றிய பணி எந்நாளும் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

காவல் பணியில் எளிய மக்களின் துயர் துடைக்கும் கரங்களாக தங்களுடைய செயல்பாடு பல முறை அமைந்துள்ளது. கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையிலிருந்த பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் அவர்களைச் சேர்ப்பது, குற்றவாளிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வது எனத் தங்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பலவும் காவல்துறை உயரதிகாரிகளின் பாராட்டுகளுக்கும் பொதுமக்களின் வாழ்த்துகளுக்கும் உரியவையாக அமைந்துள்ளன.

சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளரான திருமதி. இராஜேஸ்வரி ஆகிய தங்களின் மனிதாபிமான செயல்பாடு, தங்களைப் போன்ற மனிதாபிமானம் கொண்ட தமிழ்நாடு காவல்துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்ற முறையிலும், மழைக்காலப் பேரிடர் நேரத்தில் தொடர்ச்சியாகப் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தவன் என்ற முறையிலும் தங்களின் மனிதாபிமானமிக்க உயிர்க் காப்புப் பணிக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பதற்கேற்ப கம்பீரமாகவும் கருணை உள்ளத்துடனும் தாங்கள் மேற்கொண்ட பணி, காவல்துறையில் உள்ள அனைவருக்கும் பெருமையையும் ஊக்கத்தையும் அளிக்கக் கூடியதாகும். தங்களின் சேவைக்கு வாழ்த்துகள்! சட்டத்தையும் மக்களையும் காக்கின்ற பணி தொடரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button