தமிழ்நாடு

23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையத்திலேயே பெறலாம்..! : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் அரசாணையைப் பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, பள்ளிக்கல்வித் துறையின் சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் பெறுவது தொடர்பான அறிவிப்பை அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இது குறித்த அரசாணையைப் பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அரசாணையின் படி நன்னடத்தைச் சான்று, புலப்பெயர்வு சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்களை இனி அரசு பொதுச்சேவை மையங்களின் வாயிலாகவே பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை இந்தச் சான்றிதழ்களை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மாணவர்கள் பெற்று வந்த நிலையில், தற்போது இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில், “2021-2022ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது கல்வித்துறை அமைச்சரால் மின்னணு சேவைகள் என்ற தலைப்பில் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையில் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றுகளான நன்னடத்தைச் சான்று, ஆளறிசான்று, தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளும் அவர்தம் இல்லத்திற்கு அருகில் உள்ள அரசு பொதுச் சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றிப் பெற்றுக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாகப் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள பல்வேறு இயக்ககங்களின் வாயிலாக இரண்டாம்படி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் நகல், புலப்பெயர்வு சான்றிதழ் (Migration Certificate), கல்வி இணைச் சான்றிதழ் (Equivalence Certificate), தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான சான்றிதழ் போன்ற பல்வேறு வகையான சான்றிதழ்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த பல்வேறு அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வாயிலாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெற்று வருகின்றனர்.

இச்சேவைகள் சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வந்தாலும், மாணவர்கள். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கே நேரில் சென்று பெற்றுவரும் நிலை இருந்து வருகிறது என்றும் இதனால் சம்பந்தப்பட்ட நபருக்கு கால விரயம் மற்றும் பண விரயம் ஏற்படுவதுடன், அரசு அலுவலகங்களுக்கும் பணிச்சுமை கூடி வருகிறது. எனவே பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் மாணவர்கள் பெற்றுக்கொள்ள புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button