தமிழ்நாடு

ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.112 கோடி

ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.112 கோடியே ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 500 ஒதுக்கி, அதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வெளியிட்டிருக்கிறது. அந்த அரசாணையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-


பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளான கழிவறைகளை புனரமைப்பது, பழுது நீக்கம் செய்வது, பழுதடைந்த குடிநீர் வசதியை சரி செய்வது, பள்ளி கட்டிடங்கள், சமையலறைகளை புனரமைப்பது போன்ற பணிகளை இந்த நிதியைக் கொண்டு மேற்கொள்ளலாம். இந்த பணிகளை மேற்கொள்வதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி மற்றும் இளநிலை என்ஜினீயர், பள்ளி தலைமை ஆசிரியர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.


பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மாவட்ட கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், செயற்பொறியாளர், உதவி இயக்குனர் நிலை அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர் சோதனை செய்து சரிபார்க்க வேண்டும். இந்த பணிகளுக்கான நிர்வாக அனுமதி மாவட்ட கலெக்டரால் வழங்கப்படும். பழுது, புனரமைக்கப்பட வேண்டிய பள்ளிகளின் கட்டிடங்கள், சமையலறை கூடம், கழிவறை கட்டிடங்கள் உள் மற்றும் வெளிப்புற தோற்றத்தில் பல்வேறு வகையான புகைப்படங்கள் ஒப்புதலுக்கான மதிப்பீட்டில் இணைக்கப்படாவிட்டால் நிர்வாக அனுமதி வழங்கக்கூடாது.


பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் குறித்து ஆரம்பம் முதல் நிறைவு வரை அனைத்து விரிவான ஆவணங்களை தயாரித்து அதை கல்வியியல் மேலாண்மை தகவல் மைய (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button