தமிழ்நாடு

புதிய தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம்… : முதல்வர் ஸ்டாலின்…

தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்கப்படுத்தி வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ரூ.1100 கோடி முதலீட்டில் 14,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பெகாட்ரான் தொழிற்சாலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை, பெகாட்ரான் நிறுவனமானது, தைவான் நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கணினி, தகவல்தொடர்பு சாதனங்கள், நுகர்வோர் மின்னணுவியல் ஆகிய பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம். உலகின் பல்வேறு பகுதிகளில் தன்னுடைய உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளதன் மூலமாக, ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிற நிறுவனங்களிலும் ஒன்றாக இது விளங்கிக் கொண்டிருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற நிறுவனத்திற்கு ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்து தரக்கூடிய ஒப்பந்த உற்பத்தியாளராகவும் இந்த நிறுவனம் விளங்கி வருகிறது. முன்னணி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள முன்வந்துள்ளது மட்டுமின்றி, தனது உற்பத்தித் திட்டத்தினை தமிழநாட்டில் நிறுவியது எனக்கு உள்ளபடியே இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. உலகப் புகழ்பெற்ற பிராண்ட் ஒன்று தமிழகத்தில் தயாராவது என்பது தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பெருமை.

புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதன் மூலமாக அந்த வட்டாரம் -மாவட்டம் வளர்ச்சி பெறுகிறது. அதனைச் சுற்றி இருக்கும் சமூகங்கள் வளர்ச்சி அடைகிறது. -இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது என்கிற அடிப்படையில்தான் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகுவதை ஊக்கப்படுத்தி வருகிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 18 மாதங்களில் பெகாட்ரான் நிறுவனம் உற்பத்தியைத் துவக்கியிருப்பது, தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான சூழ்நிலை இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

2030-ஆம் ஆண்டிற்குள் நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்பதுதான் எங்களது இலட்சிய இலக்கு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இதன் பொருட்டு, உயர் தொழில்நுட்பத் திட்டங்களையும், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் திட்டங்களையும் ஈர்ப்பதற்கு நாங்கள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

ஒவ்வொரு துறையிலும், மதிப்புக் கூட்டு உற்பத்தி மேற்கொள்ளும் திட்டங்களையும், பன்முகப்படுத்தும் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறான முயற்சிகளின் விளைவாக, அண்மையில்தான் ஒரு மிகப் பெரிய செமி-கண்டக்டர் உற்பத்தித் திட்டத்தைத் தமிழ்நாட்டில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போது, சீனாவில்தான், புதிய செல்போன் மாடல்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன.

அதனை மாற்றி, தமிழ்நாட்டினை அத்தகைய உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்குடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஸ்மார்ட்போன்கள் உற்பத்திக்கான முழு விநியோகச் சங்கிலியையும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button