தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பு வழங்குவதில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்- : தஞ்சை கலெக்டர் தகவல்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகின்ற தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்திற்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சரக்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் முழுக் கரும்பு ஒன்றினையும் சேர்த்து வழங்க தமிழக அரசால் ஆணையிட்டு உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1-12-2022 தேதியில் புழக்கத்தில் உள்ள 7,00,505 குடும்ப அட்டைதரர்களுக்கும் 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை அந்தந்த ரேசன் கடைகள் மூலம் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கத்துடன் முழு கரும்பு ஒன்றும் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் வினியோகிக்கும் பணி தொடங்கியது. வருகிற 8-ம் தேதி வரை அந்தந்த ரேசன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களிலும், தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 04362-245442 மற்றும் 04362-231336 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தங்களது புகாரினை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button