தமிழ்நாடு

வக்கம்பட்டி மண்ணில் வரலாறு படைக்கிறார் முனைவர் பா.மூர்த்தி IPS

முனைவர் பா. மூர்த்தி காவல்துறையில் உயர் பதவி வகிக்கும் ஓர் உன்னதமான அதிகாரி. DIG யாக பதவி உயர்வு பெற்றிருக்கும் முனைவர் பா.மூர்த்தி அவர்கள் தற்போது தாம்பரத்தின் இணை ஆணையராக சுற்றிச் சுழன்று வருகிறார்.

புதுக்கோட்டையில் எஸ் பி ஆக பணிபுரிந்த காலத்திலும் தற்போதும் கூட புதுக்கோட்டை மக்கள் மனதில் நீங்காது நிறைந்து இருப்பவர்.நிர்வாகத் திறனிலும் நேர்மையிலும் நிமிர்ந்து நிற்பவர். அவருக்குள் ஒரு பேராசிரியர் உண்டு. அவருக்குள் ஒரு எழுத்தாளர் உண்டு.அவருக்குள் தேர்ந்த உரையாளர் உண்டு.

இப்படி இலக்கியத்தின் பால் தன்னை இணைத்துக் கொண்டிருப்பவர் முனைவர் பா.மூர்த்தி அவர்கள். ஐபிஎஸ் படித்து விட்டோம் அது போதும் என்று நினைக்காமல் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் பண்பாளர் பாலுசாமி அவர்கள், தான் கற்காத கல்வியை தன் பிள்ளைகள் பெற வேண்டும் என்று அவர்கள் விரும்பும் உயரம் வரை அவர்களைப் படிக்க வைத்தார்.

பண்புக்கும் நேசத்திற்கும் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் முன்மாதிரியாக வாழ்ந்த தந்தையார் பாலுசாமி அவர்கள் மறைவு அவரது மகன் முனைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ் அவர்களை மிகவும் பாதித்தது.

தன் பணிப்பொறுப்பில் பயம் என்பதை பார்த்தறியாத பா.மூர்த்தி அவர்கள் தன் தந்தையார் மறைவை எண்ணிக் கண்கலங்கிப் போனார். அதுவரை அடைத்து வைத்திருந்த பிரியங்களை “சிந்தையில் எம் தந்தை” எனும் நூலில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார். தந்தையின் நினைவுகள் ஒவ்வொரு நாளும் தனக்குள் நிழலாடி கொண்டிருப்பதை உணர்ந்த பா.மூர்த்தி அவர்கள் தன் தந்தை வாழ்ந்த வீட்டை, அந்தப் பாரம்பரிய சொத்தை தந்தையின் பெயரில் ஒரு படிப்பகம் உருவாக்கி தன் கிராமம் மட்டுமல்லாது சுற்றியுள்ள கிராமத்தில் வாழும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் ‘பாலா படிப்பகம்’ என்ற ஒன்றை தொடங்க எண்ணினார். அதை வெறும் படிப்பகமாக மட்டும் மாற்றாமல் தந்தை வாழ்ந்த வீட்டை புணரமைத்து ஏராளமான நூல்கள் கொண்ட நூலகம் ஆக்கி மாணவர்களின் வயதிற்கு ஏற்ற இருக்கைகளை அமைத்து கம்ப்யூட்டர் வசதி, இன்டர்நெட் வசதி, ஸ்மார்ட் போர்ட் வசதி, குளிர் நீர், சுடுநீர் என தூய்மையான நீர் இயந்திரம் அமைத்து ஒரு அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த படிப்பாகவும் பயிற்சி மையமாகவும் அதை மாற்றி இருக்கிறார்.

நாள் ஒன்றுக்கு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்துகிறார்கள். மாணவர்கள் அந்த நூலகத்தின் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுகிறார்கள்.இன்று கல்வி பயில்கிற மாணவர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவின் உச்சத்தில் நிமிர்வார்கள். பல உயர் பதவிகளுக்கு வேலை வாய்ப்புகளுக்குச் செல்வார்கள். பல வெற்றிகளைக் குவிப்பார்கள். இது அனைத்துக்கும் காரணமாக பெரியவர் பால்சாமி அவர்கள் திகழ்வார்கள். அத்தகைய ஒரு நற்பணியினை சமூகப் பணியினை தலைமுறைகளை தூக்கி நிறுத்தும் தூய பணியினை முனைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ் அவர்கள் தனது வக்கம்பட்டி கிராமத்தில் தொடங்கி இருக்கிறார். ஒரு ஐந்து நிமிடம் அதை பார்வையிட்டு விட்டுப் போகலாம் என்று தான் உள்ளே சென்றேன். ஆனால் என்னால் அந்த இடத்தை விட்டு எளிதாக வெளியே வர இயலவில்லை. அந்த இல்லம் பராமரிக்கப்பட்டிருக்கும் விதமே என்னை மிகவும் ஈர்த்தது.

நண்பர்கள் நல்.நாகராஜன், பாலா, துளிர் அமைப்பினர், லயன்ஸ் சங்கத்தினர் என இவ்வில்லத்தை பராமரிப்பதற்கு என்றே ஒரு குழு தன்னார்வமாக இயங்குவதை பார்க்கிறபோது சேவை செய்யத்தான் எத்தனை பேர் தங்கள் கரங்களை நீட்டுகிறார்கள் என்பதறிந்து நான் பிரமித்துப் போனேன். முனைவர் பா.மூர்த்தி அவர்களுடைய இந்த பண்பாட்டுப் பணிகள் காலத்தை கடந்தும் அவரது குடும்பத்திற்கு நிலைத்த கௌரவத்தை தரும். இந்தக் குறளுக்கு வேறு விளக்கம் தேவையில்லை என கருதுகிறேன்…

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button