தமிழ்நாடு

குழந்தை பிரசவித்த இரண்டாவது நாளில் தேர்வு : 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீபதி

வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், தன்னுடைய அடையாளத்தை மாற்றுவதற்கும் படிப்பு மிகவும் அவசியம்; ஆனால் சமீப காலமாக படிப்பு என்பது கட்டாயம் அல்ல; பிள்ளைகளை கட்டாயப் படுத்தி கல்வி கற்க வைக்காதீர்கள் என்று கருத்துகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன. ஆனால் கல்விதான் எல்லாம் என்று படிப்பின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் அவர்களுக்கு பதிலளித்தும் வந்தார்கள். கல்வி ஒருவரை எங்கிருந்து எங்கோ எடுத்து செல்லும் என்பதற்கு பல பேரை உதாரணங்களாகக் கூறலாம்; அந்தப் பல பேரில் மற்றுமொரு நபராக இணைந்துள்ளார் 23 வயதேயான பழங்குடியினப் பெண் ஸ்ரீபதி.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபதி. ஏழ்மை குடும்ப பின்னணியில் வளர்ந்த ஸ்ரீபதி கல்வியின் முக்கியத்துவம் கருதி வறுமையிலும் போராடிக் கல்வி கற்று பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பு படிக்கும் போது ஸ்ரீபதிக்கு திருமணமான நிலையில் 1 குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்தச் சமயம் ஸ்ரீபதி கருவுற்று இருந்தார். எப்படியாவது தேர்வை எழுதிவிட வேண்டும் என்று நினைத்த ஸ்ரீபதிக்கு, தேர்வு தேதியும், பிரசவ தேதியும் ஒரே நாளில் வந்தது பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

சற்றும் மனம் தளராத ஸ்ரீபதி, தேர்வுக்கு தயாராகி வர, தேர்வுக்கு ஒரு நாள் முன்பே பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. பொதுவாக குழந்தை பிரசவமான பெண்களுக்கு அவரது வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப சில வாரங்களாகும். தன்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருந்த ஸ்ரீபதி பிரசவமான இரண்டாவது நாளே தன்னுடைய கணவர் உதவியுடன் சென்னைக்கு காரில் வந்து சிவில் நீதிபதி தேர்வை எழுதினார். வலிகளுக்கு இடையே தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். அவர் மட்டுமல்ல அவரது குடும்ப உறவினர்களும் கூட தேர்வின் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

நீண்ட உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கைமேல் பலன் கிடைத்தது போன்று சமீபத்தில் சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. பெரும் பதற்றத்துடன் முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீபதிக்கு தேர்வின் முடிவு சாதகமாக அமைந்தது. டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஸ்ரீபதி வெற்றி பெற்றிருந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார் மரியாதைக்குரிய நீதிபதி ஸ்ரீபதி….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button