தஞ்சாவூர் மக்களவை தொகுதி வேட்பாளர்களின் களவிபரம்





திமுக கூட்டணியில் வேட்பாளர் திரு.முரசொலி விவசாய பின்னணி கொண்டவர். எளிமையானவர். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் இளங்கலை அறிவியில் பயின்றவர். பெங்களூர் ராம் மனோகர் லோகியா கல்லூரியில் LLB பயின்றவர். 2006-11 ல் தஞ்சை ஒன்றிய குழு உறுப்பினர். 2014-20-ல் திமுக பொதுக்குழு உறுப்பினர். 2022 முதல் தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார்.
பாஜக கூட்டணியில் போட்டியிடுபவர் கருப்பு என்கிற முருகானந்தம். இவர் 1986ல் ஆர்எஸ்எஸ்-&ல் இணைந்ததிலிருந்து இவரது அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது. முத்துபேட்டை மண்டல அமைப்பாளராக ஆரம்பித்து மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர் என்று படிப்படியாக உயர்ந்து தற்போது மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். காவிரி பிரச்சனைக்காக கல்லணையிலிருந்து தஞ்சை வரை பிரம்மாண்ட சைக்கிள் பேரணி நடத்தியவர். 2011ல் நாகையிலும் 2016ல் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். 2014-ல் தஞ்சை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். தற்போதும் தஞ்சையிலே போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் போட்டியிடுபவர் தேமுதிக வேட்பாளர் திரு.சிவனேசன். இவர் விவசாய பின்னணியை கொண்டவர். தொடக்க காலம் முதல் விஜயகாந்தின் தீவிர ரசிகர் மற்றும் தொண்டர். ஆரம்பத்தில் ரசிகர் மன்றத்தில் தலைவராக செயல்பட்டவர். கட்சியிலும் தீவிரமாக செயல்பட்டதால் 2006ல் தஞ்சை சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பிற்காலத்தில் மாவட்ட செயலாளரே கட்சி மாறிய போதும் இவர் தொடர்ந்து தலைமை மீது நம்பிக்கை இழக்காமல் செயல்பட்டார். அதற்கான பரிசாக தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டதாக தொண்டர்கள் நினைக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடுபவர் மு.இ.ஹிமாயூன் கபிர் இளங்கலை அரசியல் பயின்றவர். கல்வி தந்தை. அன்னை கல்வி குழுமத்தின் தாளாளர். கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். எளிமையானவர். 2009 முதல் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.
களத்தில் நான்குமுனை போட்டியிருந்தாலும் திமுகவில் உட்கட்சி பூசல் இருந்தாலும் வெற்றிக்கனியை திரு.முரசொலி அவர்களே பறிப்பார் எனது மக்களின் கருத்தாக உள்ளது. இதற்கு காரணம் அதிமுகவின் வாக்குகளை டிடிவியின் அமமுகவின் கூட்டணியில் உள்ள பாஜக பிரிப்பதே முக்கிய காரணம் மற்றும் திமுகவின் நிலையான வாக்கு வங்கியே ஆகும்.