திருப்பூரில் மாணவர்களின் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்
தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்ட பயனாளி மாணவ, மாணவியரின் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பதற்கான சிறப்பு முகாம், திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்லுாரிகளில் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களில் பயனாளி மாணவ, மாணவியரின் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தில், 37 கல்லுாரிகளில் 583 மாணவர்களுக்கும், புதுமைப்பெண் திட்டத்தில் பயனாளியாக உள்ள 32 கல்லுாரிகளில் படிக்கும் 345 மாணவியருக்கும், வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, அந்தந்த கல்லுாரிகளில், ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன; வரும் 30ம் தேதி வரை இம்முகாம் நடைபெறும். சிக்கண்ணா கல்லுாரியில், தமிழ் புதல்வன் திட்ட பயனாளி மாணவர்களின் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கும் முகாம் நடைபெற்றது; இம்முகாமை, கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டார். மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.