தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றார்

அமைச்சர்கள் செங்கோல் வழங்க சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றார். தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவருக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சென்னை மாநகராட்சி மேயராக ரிப்பன் மாளிகையில் பிரியா ராஜன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். மேயர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக அறிவித்தது. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்று மேயராக பதவி ஏற்றுக் கொண்டனர்.

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளில் மேயர் தேர்தல் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்றது. இதில் மொத்தம் 20 மாநகராட்சிகளில் திமுக போட்டியிடுகிறது. ஒரே ஒரு மாநகராட்சி மட்டும் கும்பகோணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மேயர் இருக்கை அலங்கரிக்கப் போவது யார் என எதிர்பார்த்திருந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் 323 ஆண்டுகள் கொண்ட வரலாற்றில் முதல் முறையாக பட்டியலின சமூகத்தை சேர்ந்த 28 வயதான பிரியா ராஜன் மேயராக பதவி ஏற்றுக் கொண்டார்.

சென்னை மேயராக பதிவியேற்றுக் கொண்ட பிரியா ராஜனுக்கு தமிழ்நாடு மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு, மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் செங்கோலை அளித்தனர். சென்னை மாநகர மேயருக்கு அங்கியையும் தங்க சங்கிலியை சென்னை மாநகர தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கினர். மேயராக பதவி ஏற்றுக்கொண்ட பிரியா ராஜனுக்கு சிவப்பு நிற அங்கியை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வழங்கினார். சிவப்பு நிற அங்கி அணிந்து சென்னை மேயர் பிரியா மாமன்ற கூடத்திற்கு நுழைந்தார். இதையடுத்து அவரை மேயருக்கான நாற்காலியில் அமர வைத்தனர். அமைச்சர் சேகர் பாபு, மா.சு என இரு அமைச்சர்களும் மேயர் பிரியா ராஜனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர். அது போல் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் பூங்கொத்து கொடுத்து பிரியா ராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் முதல்முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மேயர் இருக்கையை அலங்கரித்துள்ளார். 74வது வார்டில் திருவிக நகரில் திமுக சார்பில் களம் கண்டவர்தான் 28 வயது எம் காம் பட்டதாரியான பிரியா ராஜன். இவருக்குதான் தற்போது இளம் வயதிலேயே மேயராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 18 வயதில் திமுகவில் இணைந்த இவர் திமுகவின் போராட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இவரது தந்தை அப்பகுதியில் திமுக இணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவரது குடும்பம் பாரம்பரியமான திமுக குடும்பம் ஆகும்.

இவர் சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்தவர் ஆவார். இந்நிலையில் மேயர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நிலையில் பேட்டி கொடுத்துள்ள பிரியா ராஜன், கடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று முதல்வராகியுள்ளார் ஸ்டாலின், தற்போது நிறைய வித்தியாசமான மாற்றங்களை செய்து வருகிறார். அதில் நானும் பங்கு கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். எங்கள் ஏரியா மக்கள் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட பிரச்சினைகள் பிரதானமாக உள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

வழக்கமாக தென் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மேயர் வாய்ப்பு கிடைத்து வந்த நிலையில் வட சென்னையைச் சேர்ந்த பிரியா ராஜனுக்கு திமுக தலைமை வாய்ப்பு கொடுத்துள்ளது. அதேபோல் சென்னை மேயர் பதவி எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் பிரியாவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல் இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கைச் சிவத்தின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் மறைமுக தேர்தலில் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டு மேயராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் சென்னையின் மூன்றாவது பெண் மேயர் என்பதுடன், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் மேயர் என்பதும் குறிப்பிடதக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button