போலீஸ் செய்திகள்

திருவண்ணாமலை- ஏடிஎம் கொள்ளைக்கும்பல் தலைவன் கைது..! பணம், வாகனம், பறிமுதல்…

கடந்த 12.02.2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூபாய்.72,79,000/- பணத்தை திருடர்கள் கொள்ளையடித்தனர், தகவலறிந்தவுடன் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் Dr.N.கண்ணன், இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் Dr.M.S.முத்துசாமி, இ.கா.ப… அவர்கள் தலைமையில், 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தீவிர விசாரணையில், இச்சம்பவத்தில், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இக்கொள்ளையில் 6 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.செபாஸ்கல்யாண், இ.கா.ப. ஆந்திர மாநிலத்திற்கும், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஷ்கண்ணன், இ.கா.ப., குஜராத் மாநிலத்திற்கும், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., ஹரியானா மாநிலத்திற்கும், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.S.பாலகிருஷ்ணன், கர்நாடகா மாநிலத்திற்கும் தங்களது தனிப்படைகளுடன் விரைந்தனர். இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண்ஸ்ருதி, இ.கா.ப., அவர்களிடம் தடய அறிவியல் சம்மந்தப்பட்ட புலன் விசாரணை ஒப்படைக்கப்பட்டது,

தீவிர தேடுதல் வேட்டையின் காரணமாக அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் கீழ்கண்ட குற்றவாளிகள் ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். மேற்படி குற்றவாளிகள் திருடிச்சென்ற பணத்திலிருந்து ரூபாய். 3,00,000/- பணத்தையும், குற்றாவாளிகள் பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றி குற்றவாளிகளுடன் தனிப்படையினர் டெல்லியிலிருந்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஏடிஎம் கொள்ளை குறித்து மேலும் பல்வேறு நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தனிப்படை போலீசார் பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வரும் நிலையில், நான்கு ஏடிஎம் மையங்களை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதற்காக வழிவகை செய்து கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட நிஜாமுதீன் என்ற நபரை கோலார் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக கைது எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button