தமிழ்நாடு

சொந்த செலவில் இலவச ஆம்புலன்ஸ்.. நடிகர் பாலாவின் நெகிழ்ச்சி செயல்!

சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர் பாலா, ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 12 கிராம மக்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார்.

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கடம்பூர் குன்றி மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைகளுக்காக நகைச்சுவை நடிகர் பாலா, அவரது சொந்த நிதியுதவியிலான இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தின் சேவை துவக்க விழா (ஆகஸ்ட் 17) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஈரோடு எஸ்பி ஜவகர் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்தார். ஈரோடு மேயர் நாகரத்தினம், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா சண்முகம், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பாலா கூறுகையில், “ஈரோடு மாவட்டம் கடம்பூர் மற்றும் குன்றியைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மலை கிராமங்களைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு பாம்பு, விஷப் பூச்சிகள் மற்றும் வன விலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டாலோ பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல 16 கிலோ மீட்டர் தொலைவில் இருந்துதான் ஆம்புலன்ஸ் வாகனம் வர வேண்டும்.

இதையறிந்ததும், இவர்களுக்கு சொந்த நிதியின் மூலம் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கித் தர வேண்டும் என எண்ணினேன். இதற்காக யாரிடமும் நான் பணம் வாங்காமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்த பணத்தை சேர்த்து இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கிக் கொடுத்தேன். இது எனது 2 ஆவது ஆம்புலன்ஸ் வாகனம் ஆகும். இதேபோல் ஆம்புலன்ஸ் வசதியின்றி இருக்கும் குக்கிராமங்கள் மற்றும் மலைக்கிராம மக்களுக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கித் தர முடிவு செய்துள்ளேன்” என்று கூறினார்.

மேலும், ஆம்புலன்ஸ் சேவையின்றி தவிக்கும் கிராம மக்களுக்காக புதிய ஆம்புலன்ஸ் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தன்னால் முடிந்த வரை இது போன்ற மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது வரை தொலைக்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வருவதாகவும், முன்னனி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க அவர்களின் அழைப்பிற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் பாலா தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button