போலீஸ் செய்திகள்

இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்த்த கோவை காவல்துறை

கோவை மாநகரில் இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து மாநகர காவல்துறையினர் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். மீதமுள்ள 35 மாணவர்களை சேர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

கோவை மாநகர காவல்துறையின் சார்பில், ‘ஆப்ரேசன் ரிபூட்’ திட்டத்தின் கீழ் பள்ளிகளில் இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநகரில் நடப்புக் கல்வியாண்டில் இதுவரை இடைநின்ற மொத்தம் 173 மாணவ, மாணவிகள் கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் (ஆக.29) நடந்தது.

அதைத் தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுப்பதற்கும், நீண்ட கால அடிப்படையில் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் விதமாகவும் ஆப்ரேசன் ரிபூட் திட்டத்தின் கீழ் காவலர்கள் மூலம் பள்ளிகளில் இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்டறிகிறோம். தொடர்ந்து மாணவர்கள், அவர்களது பெற்றோரிடம் பேசி கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கிறோம். எக்காரணத்தால் பள்ளியிலிருந்து நின்றார்கள் எனக் கண்டறிந்து அவற்றை சரி செய்கிறோம். போலீஸ் அக்கா திட்டத்தில் உள்ள காவலர்கள், பெண்கள், சிறார்களுக்கான உதவி மைய காவலர்கள், குழந்தைகள் நலப்பிரிவு காவலர்கள் ஆகியோர் மூலம் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து இடைநின்ற மாணவ, மாணவிகளின் விவரங்களை பெற்று அவர்களிடம் பேசி மீண்டும் பள்ளியில் சேர்த்து வருகிறோம்.

அதன்படி, நடப்புக் கல்வியாண்டில் 83 மாணவிகள், 90 மாணவர்கள் என 173 மாணவ, மாணவிகள் இவ்வாறு கண்டறிப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளும் உள்ளனர். இன்னும் 35 பேர் உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். இவ்வாறு சேர்க்கப்பட்டவர்கள் மீண்டும் இடைநின்று விடக்கூடாது என்பதற்காக தொடர்ச்சியாக அவர்களை கண்காணித்து வருகிறோம். ஒரு சில மாணவர்கள் பொருளாதார காரணங்களால் இடைநின்றது தெரிந்தது. அதை சரி செய்து சேர்த்து வருகிறோம். உடல்நிலை சரியில்லாத பெற்றோர் என்றால் அவர்களுக்கு அரசு மருத்துவமனை மூலம் சிகிச்சை பெற உதவுகிறோம். மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் பொருளாதார சிக்கல்களை தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button