2 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் நிலைகள் குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை, தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை அரசால் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்புகளை உடனடியாக செயலாக்கத்திற்கு கொண்டு வந்து திட்டங்களை நிறைவேற்றிடுமாறு அதிகாரிகளிடையே அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நல இயக்குநர் ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.