போலீஸ் செய்திகள்

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் 2ம் ஆண்டு விழா : தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப., துவக்கி வைத்தார்

சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையரக கட்டிடம் 2013ம் ஆண்டு வரை சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக, சுமார் 150 ஆண்டுகளாக இயங்கி வந்தது. 2013ம் ஆண்டு வேப்பேரியில் புதிய காவல் ஆணையரகம் திறக்கப்பட்ட பிறகு இந்த கட்டிடத்தை பாரம்பரியமிக்க கட்டிடமாகவும், சென்னை பெருநகர காவல்துறையின் அடையாளமாகவும் பராமரிக்க, தமிழக அரசு உத்தரவின்பேரில், சுமார் ரூபாய் 6.47 கோடி செலவில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக புனரமைக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 28.09.2021 அன்று தமிழ்நாடு காவல் ஆருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, ஆகியோர் 29.09.2023 அன்று எழும்பூர், காவல் அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் 2ம் ஆண்டு நிறைவு விழாவை துவக்கி வைத்தனர். பின்னர், சென்னை பெருநகர காவல் சார்பில், 2ம் ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட மாறுவேடம், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மற்றும் காவல் சிறார், சிறுமியர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

மேலும், மூத்த பொது தபால்துறை அதிகாரி, தமிழ்நாடு வட்டம், திருமதி.J.சாருகேசி, இ.அ.ப. அவர்கள், தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் சிறப்பு தபால் அட்டை மற்றும் தபால் உறையை வெளியிட, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் பெற்றுக் கொண்டார்..

முன்னதாக 29.09.2023 அன்று காலை 11.00 மணியளவில் காவல் மோப்ப நாய் கண்காட்சியும், நண்பகல் 12.00 மணிக்கு காவல் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சியும், மாலை 3.00 மணியளவில், ‘‘போக்குவரத்து விதிகளை கடைபிடி‘‘ என்ற தலைப்பில் விழிப்புணர் நாடகமும். தொடர்ந்து ‘On the Streets of Chennai’ என்ற இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில், தமிழ்நாடு காவல்துறையின் பெருமையை பரைசாற்றும் விதமாக, பழங்காலத்தில் இருந்து காவல்துறை பயன்படுத்திய வாகனங்கள், சீருடைகள், பழங்கால ஆயுதங்களான வாள், ரைபிள், ரிவால்வர் முதல் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஆயுதங்கள், தடய அறிவியல், கைரேகை, வெடிகுண்டு கண்டறிதல், புகைப்படம் எடுத்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்திய கருவிகள், மன்னர் காலத்தில் இருந்த காவல் அதிகாரியின் உருவம் கொண்ட 250 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால சிலை என பல அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் மிகவும் சிறப்பான கவனஈர்ப்பு, மறுசீரமைக்கப்பட்ட காவல் ஆணையர் அறை ஆகும், இங்கு அப்போதைய ஆணையாளர்கள் முதல் தற்போதைய ஆணையாளர்கள் பயன்படுத்திய பொருட்கள், சாதனங்கள் மற்றும் கலைப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அருங்காட்சியகத்தில் பிரத்யேக ஆடியோ –விஷுவல் தியேட்டர் அமைக்கப்பட்டு, பல்வேறு போட்டிகள் மற்றும் தேசபக்தி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் வரலாறு மாணவ, மாணவிகளை எளிதில் அடையும் விதமாக, அரசு பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல் உயர் அதிகாரிகள், வெளிநாட்டவர், பல்வேறு திரைத்துறையினர், தமிழக காவல்துறை, நீதித்துறை, ஆட்சிப்பணி உயர் அதிகாரிகள், காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்கள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், காவல் அருங்காட்சியகத்திற்கு வருகை புரிந்து பார்வையிட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில், காவல்துறை இயக்குநர்கள் திரு.A.K.விஸ்வநாதன், இ.கா.ப., (த.நா.கா.வீ.வ.க.), திருமதி.சீமா அகர்வால், இ.கா.ப., (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்), தாம்பரம் காவல் ஆணையாளர் திரு.கி.அமல்ராஜ், இ.கா.ப., சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.கபில்குமார், இ.கா.ப,. (தலைமையிடம்), திருமதி.சி.மகேஸ்வரி, இ.கா.ப., (மத்திய குற்றப்பிரிவு), காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.A.கயல்விழி, இ.கா.ப., துணை ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button