Uncategorizedபோலீஸ் செய்திகள்

அபராதம் விதிக்கும்போது மென்மையான போக்கைக் கடைப்பிடியுங்கள்; போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி. அறிவுரை..

கரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணியாதோர் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதோர் மீது, அபராதம் விதிக்கும்போது அவர்களிடம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும் என, போலீஸாருக்கு புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

கரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, அபராதம் விதிக்கும்போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே சில இடங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது. போலீஸாரைக் கண்டித்துப் போராட்டமும் நடத்தப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்போது மென்மையான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும் என, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அறிவுறுத்தல் தொடர்பான அவரது குரல் பதிவானது அனைத்து சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதில் கூறியிருப்பதாவது:

“முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில் சில சிரமங்களும் ஏற்படுகின்றன.

அபராதம் விதிக்கும்போது ‘உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினரின் உயிருக்காகவும், நண்பர்களின் உயிருக்காகவுமே அபராதம் விதிக்கப்படுகிறது’ என்று கூறி தெளிவுபடுத்த வேண்டும். அப்போது, சிலர் ஏற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால், வாக்குவாதம் செய்வோரிடம் மீண்டும் மென்மையாகக் கூறி புரியவையுங்கள்.

மாறாக, பொதுமக்களிடம் போலீஸார் எதிர்த்துப் பேசத் தேவையில்லை. அதை வீடியோவாகப் பதிவு செய்துவிட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுங்கள். இதைத் தவிர, வேறு மாவட்டங்களில் வரம்பு மீறி போலீஸார் செயல்பட்டதாகக் கூறுவதைப் போன்று நாம் அதற்கு ஒருபோதும் இடம் கொடுத்துவிடக் கூடாது.

அத்தகைய நிகழ்வு நம் மாவட்டத்தில் இதுவரை இல்லை. எனினும், நமது நோக்கம் கரோனாவைக் கட்டுப்படுத்துவது மட்டுமே தவிர, பொதுமக்களை தண்டிப்பது அல்ல. அனைத்து போலீஸாரும் இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்”.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button